இலங்கை
ராணுவத்தின் கடும் தாக்குதலால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டுபிடித்து மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத்பொன் சேகா தெரிவித்தார்.இதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இதில் இடது நெற்றியில் குண்டு பாய்ந்து தலைப்பகுதி சேதம் அடைந்த நிலையில் பிரபாகரன் பிணமாக கிடந்தார்.அவரது உடலின் வேறு எந்த பகுதியிலும் காயம் இல்லை. அவரது நெற்றியில் குண்டுபாய்ந்து இருந்ததால் அவரது மண்டையோடு தெறித்து தலை சிதைந்து இருந்தது. இதனாலேயே அவரது தலைப்பகுதியை ஒரு துணியால் சுற்றி அடையாளம் காட்டியிருந்தது சிங்கள ராணுவம்.

ஆனால் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை. அவரே தற்கொலை செய்து கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.இலங்கை ராணுவத்தின் அதிரடியான கடும் தாக்குதல்கள் நெருங்கி வந்த நிலையில் பிரபாகரனை தப்பிச் செல்லும்படி முக்கிய தளபதிகள் பொட்டு அம்மானும், சூசையும் வற்புறுத்தி வந்தததாகத் தெரிகிறது. பிரபாகரனை எப்படியாவது அங்கிருந்து தப்ப வைத்திட வேண்டும் என அவர்கள் முயன்றனர். தப்பிக்கும் வழி முழுவதையும் ராணுவம் அடைத்து விட்டதால் இனி தப்பிக்க வழியில்லை எனக் கருதிய பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக கடைசி வரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என்று உறுதியாக கூறி கடைசிப் புலி உயிருடன் இருக்கும்வரை போராடுவது என்று பிரபாகரன் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை ராணுவத்தின் கோரத்தாக்குதல் அதிகரித்ததால் விடுதலைப்பிரிவு அரசியல் தலைவர் பா .நடேசன், புலித்தேவன் ஆகியோர் சரணடைவதற்காக வெள்ளைக்கொடியை ஏந்தியபடி 58-வது பிரிவு சிங்கள ராணுவ படை அதிகாரிகளை சந்திக்க சென்றனர். ஆனால் போர் தர்மத்தை கொஞ்சமும் மதிக்காத சிங்கள ராணுவம் அவர்களை கொடூரமாகச் சுட்டுக்கொன்றது. இந்த நிலையில் பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் இருந்தார். அவரைச் சுற்றி 300 தற்கொலைக் கரும்புலிகள் இருந்தனர். இதற்கிடையே ராணுவத்திடம் பிடிபட்டவர்கள் கொடுத்த தகவல்களின் மூலம் பிரபாகரன் இருக்கும் இடம் தெரிய வந்தது.உடனே ராணுவம் அந்த பகுதியைச் சுற்றி வளைத்து தாக்கியது. பீரங்கி குண்டுகளையும் வீசியது.

இந்த உச்சக்கட்ட சண்டையில் விடுதலைப்புலிகளின் வாகனங்கள் அனைத்தும் சேதமாகின. பிரபாகரனுக்கு அரணாக இருந்த தற்கொலைக் கரும்புலிகளில் லர் உயிர் இழந்தனர். செய்வதறியாது பிரபாகரன் மட்டும் தன்னந்தனியாக போர்க்களத்தில் நின்றார். தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகளால் எதிரில் வந்த ராணுவத்தினரை சுட்டிருக்கிறார். இதில் பல சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர். கடைசி வரை போராடிய பிரபாகரன் இறுதியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை நெற்றியில் வைத்து சுட்டுக் கொண்டார். சீறிப்பாய்ந்த குண்டு அவரது தலையின் மேல் பகுதியை பிளந்து கொண்டு சென்றது. பிரபாகரன் ஈழ மண்ணிலேயே மரணத்தை தழுவினார்.

இந்த பரபரப்பான தகவல் போர்களத்திலிருந்து தப்பிய சிலரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பிரபாகரனும் அவருடன் இருந்த முக்கிய தலைவர்களும் ஆம்புலன்சில் ஏறி தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அதைத் தடுத்த சிங்களராணுவம் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் கூறியுள்ளது. சிங்கள ராணுவம் கூறுவது போல் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அவரது உடல் பகுதியில் குண்டுகள் பாய்ந்திருக்கும் அல்லது ஆம்புலன்ஸ் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால் தீப்பிடித்த ஆம்புலன்ஸூடன் சேர்ந்து பிரபாகரனின் உடலும் கருகி இருக்கும் அல்லது முற்றிலும் அடையாளம் தெரியாமல் சிதைந்து இருக்கும்.

இப்போது ராணுவத்தால் மீட்கப்பட்டிருக்கின்றஉடலில் நெற்றியில் காயத்துடன் தலைப்பகுதி சிதறி இருக்கிறது.எனவே அவரை சிங்களப் படையினர் சுடவில்லை என்பது புலனாகிறது. சரி, பிரபாகரன் அவரே சுட்டு தற்கொலை செய்து இருந்தாலும் அவரது இடது நெற்றியில் எப்படி காயம் ஏற்படும் ? அதாவது பிரபாகரன் இடது கைப்பழக்கம் உள்ளவராக இருந்தால் மட்டுமே இது போல இடது நெற்றியில் சுட்டுக் கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றுதான் கூறப்படுகிறது. அப்படியானால் வலது கைப்பழக்கம் உள்ளவர் எப்படி துப்பாக்கியை வலதுகையில் வைத்து இடது நெற்றியில் சுட்டுக்கொல்ல முடியும் என இதுவும் ஒருபுறம் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

ஆனால் பிரபாகரனை இலங்கை ராணுவமும் சுட்டுக்கொல்லவில்லை, அவரும் சுட்டுக்கொண்டு சாகவில்லை. மாறாக இலங்கை ராணுவம் மிக அருகில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த போது படையினரிடம் உயிருடன் சிக்கிவிடக்கூடாது என முடிவெடுத்த பிரபாகரன் தன்னிடமிருந்த சயனைடு குப்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த சடலத்தைத் தான் படையினர் எடுத்துவந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு சண்டையில் சுட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருப்பதாகவும் , இதன் காரணமாகவே அவரது இறப்பு பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை சிங்கள அரசும் ராணுவமும் தெரிவித்து வருவதாகவும் மற்றும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அவரது உடலை அவரது 24 வருட நண்பரும், புலிகளின் முன்னாள் முக்கியத் தள‌பதியுமான‌ கருணா அடையாளம் காட்டி அந்த உடல் பிரபாகரனின் உடல் தான் என‌ உறுதிப்படுத்தியுள்ளார். அதே போல சமீபகாலத்தில் பிரபாவின் பிடியில் இருந்து தப்பிவந்ததாகக் கூறப்பட்ட புலிகளின் முக்கிய மொழிபெயர்ப்புச் செயலாளர் தயாமாஸ்டரும் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டி உறுதிசெய்தார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதைப்பற்றி இதற்குமேல்

சொலவதற்கில்லை எனவும் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் புலிகளின் ஆதரவு இணைய தளம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபாகரன் மிகப்பாதுகாப்பாக பாங்காங் தப்பிப் போய்விட்டதாகவும் மலேசியாவிற்கு தப்பிப்போய் விட்டதாகவும் இருவேறு செய்திகள் முன்பே வெளியாகியிருக்கின்றன. இதனால் தான் தலைமையின்றி புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் தப்பிக்க முயற்சித்து கடற்படையினரிடம் சிக்கிய சூசையின் மனைவி கொடுத்த தகவலில் பிரபாகரன்,சூசை,பொட்டு அம்மான் ஆகியோர் இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதியில் தான் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இலங்கையின் முழு நிலப்பரப்பையும் ராணுவம் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட‌ நிலையில் அவர்கள் இனி வேறு எங்கிருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இலங்கை அரசைத் தொடர்பு கொண்ட இந்திய அரசு ராஜீவ்காந்தியின் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக இருக்கும் பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானின் மரணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வைத்து உடணடியாக அவரது DNA பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு அனுப்பிவைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

ஆக புலிகளின் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டு பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா அல்லது படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதாகச் சொல்லி உலக ஊடகங்களுக்கு காட்டிய சடலம் பிரபாகரனுடையது தானா என்பது பற்றி உலகத் தமிழர்கள் மத்தியிலே பெரும் பதட்டம் நிலவுகிறது. இதற்கு ஒரே வழி என்னவென்றால் எப்படி இலங்கை ராணுவம் ஒரு உடலைக் காட்டி இது பிரபாவின் உடல் தான் என உறுதிசெய்துள்ளதோ அதே போல புலி ஆதரவு அமைப்புகள் புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு உலகத் தமிழர்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தவிர்க்க முன்வரவேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.