'எதற்கு இவை?', 'யார் சிருஷ்டித்தார்கள்?' என்று குழப்பிஅடிக்கும் மர்மப் பிரதேசங்கள் உலகம் முழுக்க உண்டு. அவற்றுள் சில...

ஈஸ்டர் தீவுகள் (Easter Island)

தென்அமெரிக்காவில் இருந்து 2,200 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ளது ஈஸ்டர் தீவு. இந்தத் தீவுக்கு 1722-ம் வருடம் முதலில் கால் வைத்தவர் ஜேக்கப் ரோகோவீன் என்ற கப்பல் மாலுமி.

அப்போது, அங்கு மனிதர்களே இல்லை. ஆனால், மனித முகங்கள் மட்டுமே செதுக்கப்பட்ட மெகா சைஸ் சிற்பங்கள் இருந்தன. கிட்டத்தட்ட 10 மீட்டர் உயரம்கொண்ட இந்தச் சிலைகளின் எடை 75 டன்களுக்கும் அதிகம்.

முகம் மட்டும் கவனமாகச் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களுக்கு 'மோய்'

(Moal statue) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளைத் தூக்கி வந்து வைத்ததும் மனிதர்களால் இயலக்கூடிய காரியம் அல்ல என்பதால், மர்மம் இன்னும் உடைபடாமலே இருக்கிறது!

ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge)

பிரிட்டன் வில்ட்ஷயர் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த இடம், நம் ஊர் சுமைதாங்கிக் கற்களை ஞாபகப்படுத்தும். இந்தக் கற்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. இந்தக் கற்கள் எல்லாம் கி.மு. 3000-ல் இருந்து இங்குதான் இருக்கின்றனவாம். ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில்எடை கொண்டவை. ஏதோ மந்திரவாதி சடங்குகள் செய்யத் தோதாக அமைந்த மாதிரி இருக்கும் இவற்றுக்கு அடியில், நிறைய எலும்புக்கூடுகள் இருப்பதால், இது கல்லறை என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், எலும்புகளைத் தவிர மனிதர்கள் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இங்கே இல்லை. இதனால் வேற்றுக் கிரகவாசிகள் பூலோக மனிதர்களைப் பலி கொடுத்து ஏதேனும் செய்தார்களா என்றும் மர்மம் நீள்கிறது!

நாஸ்கா லைன்ஸ் (Nazca Lines)

பெரு நாட்டில் அமைந்திருக்கும் 'ஜியோக்ளிப்' (Geoglyph) வகை பாலைவன ஓவியங்கள் கி.மு. 200-லிருந்து கி.பி.700-க்குள் உருவானவை. சிவப்பு மணலுக்கு நடுவே தோண்டி, கீழே உள்ள வெள்ளை நிற அடுக்கு தெரியும்படியான ஓவியங்களில் சிலந்தி, குரங்கு, மனிதன், பல்லி என்று பழக்கமான உருவங்கள் தான். கிட்டத்தட்ட 200 மீட்டர் அளவுக்குப் பெரிதாக அமைந்திருக்கும் இந்த ஓவியங்கள் 300-க்கு மேல் உள்ளன. விமானத்தில் பறந்தால் மட்டுமே பார்க்க முடியும் உருவங்களை, எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு கச்சிதமாக எப்படி உருவாக்கினார்கள்... யார் உருவாக்கினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்!

க்ராப் சர்க்கிள்ஸ் (Crop circles)

உங்கள் வீட்டுக்குள் திடீரென ஒரு பகுதி மட்டும் வட்ட வடிவில்அழிந்துபோனால் என்ன நினைப்பீர்கள்? கடந்த 300 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 நாடுகளில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் நிலங்களுக்கு நடுவே பல 100 மீட்டர்கள் நீளத்தில்பயிர்கள் அழிக்கப்பட்டு, இந்த டிசைன்கள் உருவாகும். ஒரே இரவில், மனித சக்தியால் சத்தமே இல்லாமல் இதை உருவாக்க முடியாது என்பதால், அந்த வயல்களை ஏதோகெட்ட சக்தி பிடித்து ஆட்டுகிறது என்று கருதி, அருகிலேயே செல்ல மாட்டார்களாம். சுழல் காற்று, மின்னல் போன்ற பல இயற்கை அமைப்புகளைக் காரணமாகயோசித்தாலும் நேரடி ஆதாரம் எதுவும் இல்லை!